Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலாம் அறிவியல் கோளரங்கத்தில் புத்தாக்க மையம்

மே 18, 2022 05:42

புதுச்சேரி: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், தேசிய அருங்காட்சியக மன்றம் ஆகியவை இணைந்து புதுவை லாஸ்பேட்டையில் அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை 2015-ல் நிறுவினர். இந்த அறிவியல் மைய வளாகத்தில் தேசிய அருங்காட்சியக மன்றம், புதுவை அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவை இணைந்து ரூ.1.50 கோடி செலவில் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளனர்.  புத்தாக்க மையத்தில் மாணவர்கள் கண்டுபிடிப்பு மையம், திட்ட ஆய்வகம், உடைத்தல், உருவாக்குதல், உடைந்த பொருட்களில் செய்தல், ஆலோசனைப்பெட்டி, வடிவமைப்பு ஓவிய அறை ஆகியவை உள்ளது. இந்த புத்தாக்க மையத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. 

கவர்னர் தமிழிசை புத்தாக்க மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி., அறிவியல் தொழில் நுட்பத்துறை செயலர் ஸ்மித்தா, சாதனா, முதுநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இந்த மையத்தின் செயல்பாடு, பராமரிப்பு 3 ஆண்டுக்கு ரூ.45 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளும். இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம கூறியதாவது:-  உலக அருங்காட்சியக தினத்தில் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழி வழி செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல் கலாம்  அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறது.  இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதன் மூலம், எந்த பள்ளியில் படிக்கும் எந்த குழந்தையும் எந்த ஆராய்ச்சி செய்யலாம்.

புதுவை அரசும் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி. மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு எவ்வளவு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதற்கும், மக்கள் எவ்வளவு பலம் பெறுவார்கள் என்பதற்கும் இந்த கண்காட்சியும் ஆராய்ச்சி மையமும் உதாரணம். மரியாதைக்குரிய அப்துல் கலாம், வாழத் தகுந்த பூமியாக, முழுமை–யாக மறுசுழற்சிக்கு சாத்திய–முள்ள பூமியாக இது இருக்கவேண்டும் என்று கூறினார். குப்பைகளை அகற்ற ஒரு ரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள்.  குப்பைகள் இல்லாத புதுவையாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதல்-அமைச்சருடன் கலந்தாலோசனை செய்து திட்டங்களை வகுத்து குப்பைகள் இல்லாத புதுவையாக மாற்றும் வகையில் விஞ்ஞான–பூர்வமாக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை இங்கு கிடைத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  அவரிடம், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே? என கேள்வி எழுப்பியதற்கு, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் கருத்து கூற விரும்பவில்லை எனக்கூறி சென்றார்.
 

தலைப்புச்செய்திகள்